பணத்துக்காக 10ம் வகுப்பு மாணவர் கடத்திக் கொலை.. ஹைதராபாத்தில் பரபரப்பு
ஹைதராபாத்: பணத்துக்காக 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத், சாஹின்யகஞ்ச் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார். ராஜேந்தர் நகரில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிலை செய்து வரும் இவரது 15 வயது மகன் அபய்.
10ம் வகுப்பு படித்து வந்த அபய், நேற்று முன்தினம் மாலை அருகிலுள்ள கடைக்குச் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அபய் தனது இருசக்கர வாகனத்துடன் மாயமானதாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகள்...
அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக் காட்சிகளைப் போலீசார் சோதனையிட்டனர். அதில், கடைக்குச் சென்று திரும்பி வரும் அபயை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வழிமறித்து பேச்சு கொடுப்பதும், அவர் ஏற்கெனவே அறிமுகமானவர் போல் அபய் பேசுவதும், பின்னர் அவருடன் இருசக்கர வாகனத்தில் அபய் செல்வதும் பதிவாகியிருந்தது.
பணம் கேட்டு மிரட்டல்...
அந்த வீடியோ காட்சியிலுள்ள மர்மநபர் யார், அவருடன் அபய் எங்கே சென்றார் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அபயின் சித்திக்கு போன் ஒன்று வந்துள்ளது. அதில், ‘அபயைக் கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க ரூ.10 கோடி தர வேண்டும்' எனவும் மிரட்டியுள்ளனர். இந்த அழைப்பு வந்த சில நிமிடங்களிலேயே அபயின் தந்தைக்கும், அதே நபர் போன் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
சிறப்புப்படை...
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், இரண்டு மிரட்டல் போன் அழைப்புகளும் செகுந்தராபாத்தில் இருந்து வந்ததை உறுதி செய்தனர். உடனடியாக அப்பகுதிக்கு சிறப்புப்படை போலீசார் விரைந்தனர்.
உடல் மீட்பு...
சந்தேகத்திற்குரிய பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் சாலையோரம் கிடந்த அட்டைப் பெட்டி ஒன்றில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அபயின் உடல் மீட்கப்பட்டது.
சந்தேகம்...
தொழில் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அபயைக் கடத்திக் கொலை செய்த நபர், அவரது அப்பாவின் முன்னாள் ஊழியராக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது.
பரிசு அறிவிப்பு...
கொலையாளியை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதோடு, சிசிடிவி காட்சியில் இடம் பெற்றுள்ள அபயைக் கடத்திச் சென்ற நபரைக் குறித்து தகவல் தெரிவித்தால், ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் போலீசார் அறிவித்துள்ளனர்.