தோழி பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோ எடுத்து வெளியிட்ட 2 பள்ளி மாணவிகள்
பரேலி: உத்தர பிரதேசத்தில் இரண்டு பள்ளி மாணவிகள் தங்களின் தோழி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஷெர்கார் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த 18ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அவரது பள்ளித் தோழிகள் இருவர் அமன் என்ற வாலிபருடன் வந்துள்ளனர்.
வீட்டிற்குள் வந்த அவர்கள் மாணவியை ஒரு அறையில் தள்ளி கதவை பூட்டியுள்ளனர். அமன் அந்த மாணவியை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளார். அதை தடுக்காமல் அவரின் தோழிகள் தங்களின் செல்போனில் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவரின் தோழிகள் தாங்கள் எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட அது தீயாக பரவியது. அந்த வீடியோ பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கண்ணில் பட்டபோது தான் விஷயம் வெளியே வந்தது.
உடனே அவர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோ எடுத்த இரண்டு மாணவிகளை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அமனை தேடி வருகின்றனர்.