புல்வாமா தாக்குதல் : பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-ஆப்’ பதிவு.. தனியார் பள்ளி ஆசிரியை கைது
பெலகாவி: இந்தியாவுக்கு எதிராக வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்ததாக பெங்களூர் பள்ளி ஆசிரியை ஒருவர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஜம்மு- காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனால் பாகிஸ்தான் மீது நாடே உச்சக்கட்ட கோபத்தில் உள்ளது.
இருப்பினும் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவர்களை போலீஸார் கைது செய்த வண்ணம் உள்ளனர்.
தேசதுரோக வழக்கு
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாக பெங்களூர் தனியார் கல்லூரியில் படித்து வரும் ஜம்மு- காஷ்மீரை சேர்ந்த பொறியியல் மாணவர் தாகீர் லத்தீப் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
6 பேர் மீது வழக்கு
ஹாவேரி மாவட்டத்தில் ஒருவரும் சிக்கியுள்ளார். பெங்களூருவில் வசித்த ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஆபித் மாலிக், ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கியில் வசித்து வரும் 6 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டு உள்ளார்.
வாட்ஸ் ஆப்
பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா கடபி சிவாபுரா கிராமத்தில் வசித்து வருபவர் ஜீலிகாபீ மமதாபூர் (25). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இந்த நிலையில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து அவர் தனது வாட்ஸ் ஆப்பில் பாகிஸ்தான் கி ஜெய்ஹோ என்றும் பாகிஸ்தானை விரும்புகிறேன் என்றும் பதிவு செய்துள்ளார். அத்துடன் பாகிஸ்தானை பாராட்டியும் பதிவு செய்திருந்தார்.
வீட்டு வாசலில்
இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் அவருடைய வீட்டின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆசிரியை ஜீலிகாபீக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அவருடைய வீட்டு மீது கல் வீசிய அவர்கள் வீட்டு வாசலில் தீவைத்தனர். இதனால் வாசலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது.
போராட்டம்
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் ஆசிரியை ஜீலிகாபீயை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தினர்.
6 பேரும் கைது
அப்போது போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் வாட்ஸ் ஆப்பில் அதுபோன்ற பதிவு செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் மீது தேசதுரோகம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜீலிகாபீ வீட்டுக்கு தீவைத்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுபற்றியும் முருகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.