பள்ளியில் சர்ச்சை சாமியார் ஆசாராம் படத்தை வைத்து வழிபட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் !
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு படத்தை வைத்து வழிபட்ட ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வழக்குகளில் சிக்கிய சாமியார் ஆசாராம் பாபு கடந்த 2013 ஆம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். 16 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட ஆசாராம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தற்போது வயது முதிர்வு மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி புதிய ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் தோலாதர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், ஆசாராம் படத்தை வைத்து வழிபட்டதாகவும், பிற மாணவர்களையும் கடவுள் வாழ்த்துப் பாடலுக்குப் பதில் ஆசாராம் ஸ்தோத்திரத்தை சொல்லும்படி கேட்டுக்கொண்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தொடக்கக் கல்வி செயலாளர், சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஆசாராம் படத்தை வைத்து வழிபட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
சக ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஆசாராமை வழிபடுவதை அவர் நிறுத்தாமல் இருந்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொடக்கக் கல்வி செயலாளர் தெரிவித்தார்.