அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு.. இந்தெந்த மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில் டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஜம்மு, கர்நாடகம் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் அயோத்தி இடம்பெற்றுள்ள உத்தரப்பிரதேசத்தில் இன்று முதல் திங்கள்கிழமை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை எழுந்தது.
3 பிரிவினர்
இந்த சர்ச்சைக்குரிய நிலத்தை மனுதாரர்கள் பிரித்து கொள்ள வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா விராஜ்மன் என்ற 3 பிரிவினரும் உச்சநீதிமன்றத்தை நாடினர்.
5 நீதிபதிகள்
இந்த வழக்கை விசாரிக்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. அதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூஷன், எஸ் ஏ நசீர் ஆகிய 5 நீதிபதிகள் உள்ளனர்.
உஷார் நிலை
இந்த அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கிய நிலையில் முன்னதாக நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உஷார் நிலையில் பல்வேறு மாநிலங்கள் உள்ளன.
விடுமுறை
இதில் உத்தரப்பிரதேசத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இன்று முதல் வரும் திங்கள்கிழமை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் டெல்லி, மத்திய பிரதேசம், ஜம்மு, கர்நாடகம், ராஜஸ்தான் ஆகியவற்றிலும் 144 தடை உத்தரவும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.