சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி! 5 ரூபாய்க்கு ஆயுர்வேத மாத்திரை!!
டெல்லி: 5 ரூபாய் என்ன வாங்கலாம் என்று கேட்பவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இருக்கிறது.... 5 ரூபாய்க்கு ஆயுர்வேத மூலிகை மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிஜிஆர் - 34 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாத்திரை நான்குவகை அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயாளிகளின் பாடு இன்றைக்கு படு திண்டாட்டமாக உள்ளது மாதந்தோறும் மாத்திரை வாங்கவே ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது. இவர்களுக்கு வரப்பிரசாதமாகவே, அமைந்துள்ளது இந்த ஆயுர்வேத மாத்திரை.
சர்க்கரை நோய்
ஒருகாலத்தில், 'பணக்காரர்களின் வியாதி' என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்தியர்களுக்கு பாதிப்பு
கிட்டத்தட்ட ஆறரைக் கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 7.7 கோடி இந்தியர்கள், சர்க்கரை நோய் வருவதற்கான எல்லைக்கோட்டில் உள்ளனர். 2030-ல் இது 8.7 கோடியாக அதிகரித்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய்க்கு காரணம்
சர்க்கரை நோயால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதற்கு உடல் பருமனே முக்கிய காரணம். சர்க்கரை நோயானது இதய நோய்கள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்தக் குழாய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம். தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசி ஆகிய மூன்றும் சர்க்கரை நோயின் அறிகுறிகள்.
எத்தனை வகை சர்க்கரை நோய்
டைப் 1 சர்க்கரை நோய், டைப் 2 சர்க்கரை நோய், கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் என்று சர்க்கரை நோய் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தவிர சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்று ஒரு வகையும் உள்ளது. இதைப் 'பிரீ டயாபடிஸ்' என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆயுர்வேத மாத்திரை
நீரிழிவு நோயாளிகளின் பாடு இன்றைக்கு படு திண்டாட்டமாக உள்ளது மாதந்தோறும் மாத்திரை வாங்கவே ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது. இவர்களுக்கு வரப்பிரசாதமாகவே, அமைந்துள்ளது பிஜிஆர் - 34
டைப் 2 நீரிழிவு நோய்
‘டைப் 2' என்றழைக்கப்படும் அதிதீவிரத்தன்மை கொண்ட நீரிழிவால் பாதிக்கப்பட்ட உயிரினங்களிடம் ஆரம்பகட்டத்தில் இந்த மாத்திரையைகொண்டு நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் 67 சதவீதம் வெற்றிகரமான விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
வெறும் 5 ரூபாய்தான்
கடந்த பிப்ரவரி மாதம் துணை குடியரசுத்தலைவர் ஹமித் அன்சாரியால் அறிமுகம் செய்விக்கப்பட்ட இந்த மாத்திரை நேற்று வர்த்தகரீதியாக விற்பனைக்காக வெளியிடப்பட்டது. 100 மாத்திரைகளின் விலை 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள, பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத இந்த 'பிஜிஆர் - 34' இன்னும் 15 நாட்களில் நாட்டிலுள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
பின்விளைவுகள் கிடையாது
பிஜிஆர் - 34 என்ற மாத்திரை ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சமன்படுத்தியும், அதிகமாக சுரக்கும் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தியும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பின்விளைவுகளை பெருமளவில் தடுப்பதாக ஆய்வுகளில் தெரியவந்தது.