மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை வேட்பாளரானார் ஜோதிராதித்ய சிந்தியா.. அறிவித்தது பாஜக
போபால்: மத்திய பிரதேசத்திலிருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக ஜோதிராதித்ய சிந்தியா அறிவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்திலிருந்து அனுப்பப்பட்ட 3 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வரும் மார்ச் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக சார்பில் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை வேட்பாளராக இருவர் அறிவிக்கப்பட்டனர்.
அதில் இன்று மதியம் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு வேட்பாளராக ஹர்ஷ் சிங் அறிவிக்கப்பட்டார்.
கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகள் கொடுக்கப்படவில்லை என்பதால் கடந்த ஓராண்டாக மன உளைச்சலில் இருந்து வந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவர் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் நெருங்கி பழகக் கூடியவர்.
இந்த நிலையில் அண்மைக்காலமாக தான் ஓரங்கட்டப்படுவதை உணர்ந்து நேற்றைய தினம் பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்தவுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கான கடிதத்தையும் சோனியாவிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து இன்று மதியம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார் சிந்தியா. அங்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் இணைந்தார். அப்போது சிந்தியா கூறுகையில் காங்கிரஸ் கட்சியில் இருந்தால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது என்பதை உறுதியாக அறிந்ததால் பாஜகவில் இணைந்தேன் என தெரிவித்தார்.