பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி வேட்பாளராகிறாரா ஜோதிராதித்ய சிந்தியா?
போபால்: காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ஜோதிராதித்ய சிந்தியா பாஜக சார்பில் மத்திய பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா எம்பி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video
மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாகவும் தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை கடத்தி வைத்துக் கொண்டு பேரம் பேசி வருவதாகவும் காங்கிரஸ் பகீர் புகாரை அளித்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக நேற்று முதல் 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதில் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவும் ஒருவர். முதல்வர் பதவி, தன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி உள்ளிட்டவை கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் உச்சகட்ட பரபரப்பு.. 6 அமைச்சர்கள் உட்பட 16 காங். எம்எல்ஏக்கள் பெங்களூர் சென்றனர்
பனிப்போர்
மேலும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் சிந்தியாதான். எனவே அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என கருதப்பட்ட நிலையில் அந்த பதவி கமல்நாத்துக்கு கிடைத்தது. இதிலிருந்தே சிந்தியாவுக்கு கமல்நாத்திற்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
3ஆவது சீட்
மத்திய பிரதேசத்திலிருந்து அனுப்பப்பட்ட 3 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. காங்கிரஸுக்கு 114 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்களும் உள்ளனர். எனவே காங்கிரஸ், பாஜகவுக்கு தலா ஒரு மாநிலங்களவை எம்பி பதவி உறுதியாகிவிட்டது. 3ஆவது சீட்டுக்குத்தான் இருவருக்கும் போட்டி நிலவி வருகிறது.
ஏமாற்றம்
இந்த நிலையில் மத்திய பிரதேசத்திலிருந்து பிரியங்காவை மாநிலங்களவைக்கு அனுப்ப மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் ஆதரவுடன் எம்பி பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்த சிந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தீர்மானம்
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் 22 அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். பெங்களூர் ரிசார்டில் தங்கியுள்ள 17 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்வர் என தெரிகிறது. இதையடுத்து மார்ச் 16-ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் பாஜக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் என தெரிகிறது.
வேட்பாளர்
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியை சிந்தியா சந்தித்துள்ளார். உடன் அமித்ஷாவும் உள்ளார். எனவே சிந்தியா பாஜகவில் இணைந்துவிட்டால் அவர் மத்தியப் பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த எம்பி பதவியை வைத்து மத்தியில் மோடியின் அமைச்சரவையில் சிந்தியா இணையவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.