காஷ்மீர் மக்களுக்கு துணை நிற்போம் என்ற பாக். அதிபர்.. கொதிக்கும் இந்திய நெட்டிசன்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மக்களுடன் துணை நிற்போம் என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி அறிவித்துள்ளதற்கு இந்திய நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில், இன்று, மத்திய அரசு அறிவித்த நிலையில் பாகிஸ்தான் அதிபர், நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.
பாகிஸ்தான் அதிபர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியுள்ளதாவது: இந்தியா ஆக்கிரமித்துள்ள, ஜம்மு-காஷ்மீரில், அந்த நாட்டு அரசு மேற்கொள்ளக் கூடிய மாற்றங்கள் என்பது ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்திற்கும், காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கும் எதிரானது.
காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு உகந்த வகையிலான, அமைதியான ஒரு தீர்வை, பாகிஸ்தான் வலியுறுத்துகிறது. அதற்கு ஆதரவு அளிக்கும். மேலும், காஷ்மீர் மக்களுக்கு, இந்த இக்கட்டான நேரத்தில் பாகிஸ்தான் துணை இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First point in the resolution is to remove pakistani troops from kashmir. Follow that first.
— vinayak bengalore (@vinayakb1509) August 5, 2019
இதனிடையே பாகிஸ்தான் அதிபரின் ட்வீட்டுக்கு பதிலடியாக, இந்திய நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில், ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தப்படி, காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் தனது ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமான ஷரத்து ஆகும்.
ஆனால் அதை நீங்கள் செய்யாமல் இந்தியாவை மட்டும் எவ்வாறு கேள்வி கேட்க முடிகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை இந்திய நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.