'தில்' இருந்தால் சுவிஸ் பேங்கில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துங்க: மோடிக்கு சிவசேனா சவால்
மும்பை: பிரதமர் மோடிக்கு துணிச்சல் இருந்தால் இந்தியர்களின் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து வங்கிகளில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டியது தானே என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மோடிக்கு சவால் விட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
துணிச்சல்
உங்களுக்கு துணிச்சல் இருந்தால் இந்தியர்களின் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து வங்கிகளில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டியது தானே. அந்த கறுப்பு பணத்தை கொண்டு வாருங்கள்.
நம்பிக்கை
மக்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்(மோடி). அவர்களின் நம்பிக்கையை கெடுக்க வேண்டாம். இல்லை எனில் மக்கள் உங்களுக்கு எதிராக நடத்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் தாக்கத்தை பார்ப்பீர்கள்.
டார்ச்சர்
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக உள்ளோம். ஆனால் அதை மக்களை கஷ்டப்படுத்தி செய்ய வேண்டாம். புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு இல்லாமல் இருப்பது மக்களுக்கு டார்ச்சராக உள்ளது.
பழைய நோட்டுகள்
மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை பழைய நோட்டுகளை கொண்டு செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் மக்களுக்கு மேலும் துன்பம் தான்.