மங்களூர் சிறைக்குள் மத மோதல்: இரு கோஷ்டிகள் மோதியதில் கொலை குற்றவாளிகள் 2 பேர் சாவு
மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூர் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு நடுவே மதப்பிரச்சினையால் ஏற்பட்ட மோதலில், 2 கொலை குற்றவாளிகள் கொலை செய்யப்பட்டனர்.
பாஜக தலைவர்களில் ஒருவரான சுகானந்த ஷெட்டி மற்றும் ரவுடி கேன்டில் சாந்து ஆகியோரை கொலை செய்தது உட்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த தாதா மட்டூர் இசுபு, 2010ம் ஆண்டு ரியாத்தில் வைத்து இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இசுபு, மங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதேபோல, 1994ம் ஆண்டு நடைபெற்ற மகேந்திர பிரதாப் கொலை வழக்கில் தொடர்புள்ள கணேஷ் ஷெட்டியும் இதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவ்விரு கொலைகுற்றவாளிகளுக்கும், அவர்களின் கோஷ்டியினருக்கும், சிறைக்குள் அவ்வப்போது மத மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. கடந்தத சில நாட்களாக அவ்வப்போது இரு கோஷ்டியும் மோதி வந்தது. இந்நிலையில் இன்று காலை கலவரம் பெரிதாக வெடித்தது.
இரு கோஷ்டியும் ஒருவரை ஒருவர், கத்தி, அரிவாளால் தாக்கிக் கொண்டனர். இதில் இசுபு மற்றும் கணேஷ் ஷெட்டி ஆகிய இருவரும் படுகாயமடைந்து அங்கேயே உயிரிழந்தனர். காயமடைந்த 12 சிறை கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும், மங்களூர் போலீஸ் கமிஷனர் முருகன், சிறைக்கு சென்று பார்வையிட்டார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், "இரு கோஷ்டியை சேர்ந்தவர்களின் கூட்டாளிகளும், சிறைக்கு வெளியே இருந்து ஆயுதங்களை உள்ளே வீசியிருக்கலாம் என்று தெரிகிறது. அந்த ஆயுதங்களை வைத்துதான் கலவரம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு மத சாயம் பூச வேண்டாம். இவ்வாறு முருகன் தெரிவித்தார்.