மமதா அதிரடி வியூகம்... பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது சிக்கிம் ஜனநாயக முன்னணி?
சிலிகுரி: வடகிழக்கு மாநிலங்களில் எங்கள் கொடி பறக்கிறது என பாஜக மார்தட்டுகிறது.. இதற்கு பதிலடியாக பாஜக கூட்டணியில் இருந்து கட்சிகளை வெளியேற்றும் வியூகத்தை செயல்படுத்தி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆளும் கட்சியாக இருக்கிறது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் வடகிழக்கு மாநில கட்சிகளின் கூட்டணியிலும் இடம்பெற்றிருக்கிறது.
சிக்கிமில் பாஜக கூட்டணியில் பிளவு
ஆனால் அண்மைக்காலமாக பாஜக தலைவர்கள் சிக்கிம் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அத்துடன் அண்மையில் கூர்க்காலாந்து பிரச்சனையால் சிக்கிமுக்காக சரக்கு போக்குவரத்து மோசமாக பாதிக்கப்பட்டது.
மமதா அதிரடி வியூகம்
இது தொடர்பாக மத்திய பாஜக அரசிடம் சிக்கிம் அரசு முறையிட்டது. ஆனாலும் டெல்லி, சிக்கிமை கண்டுகொள்ளவில்லை. இதனிடையே சிக்கிம் ஆளும் கட்சியின் அதிருப்தியை உணர்ந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிரடி வியூகம் வகுத்தார்.
சாம்லிங் மமதா அதிரடி ஆலோசனை
சிலிகுரியில் சிக்கிம் முதல்வர் சாம்லிங்கை நேரில் சந்தித்து பேசினார் மமதா பானர்ஜி. கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற இந்த சந்திப்பில் டார்ஜிலிங் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் கடந்த கால தவறான புரிதல்களை இருதரப்பும் மறப்போம் எனவும் சூளுரைத்தனர்.
பாஜகவுக்கு எஸ்டிஎப் டாட்டா
இரு மாநிலங்களும் முழுமையாக ஒத்துழைப்புடன் செயல்படவும் உறுதி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து பாஜகவுடனான கூட்டணியில் இருந்து சிக்கிம் ஜனநாயக முன்னணி வெளியேறவும் வாய்ப்புள்ளது. அதேபோல் பாஜகவின் வடகிழக்கு மாநில கட்சிகளின் கூட்டணியில் இருந்தும் சிக்கிம் ஜனநாயக முன்னணி ஜூட் விடவும் வாய்ப்பிருக்கிறது. இது பாஜகவுக்கு மிகப் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.