பெங்களூரில் கேபிஎன் பஸ்களை எரிக்க தூண்டியது ஒரு பெண்.. போலீஸ் விசாரணையில் ஷாக் தகவல்
பெங்களூர்: பெங்களூரில் கேபிஎன் பஸ்களை தீயிட்டு கொளுத்திய கும்பலை ஒரு பெண் தலைமையேற்று நடத்தியுள்ளார். இவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காவிரி தொடர்பாக பெங்களூரில் கடந்த 12ம் தேதி, திங்கள்கிழமை நடைபெற்ற வன்முறையின்போது, பெங்களூர் டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்தின் 42 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இளைஞர்கள் போலீசில் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், அக்கலவர பின்னணியில் ஒரு பெண் இருந்தது தெரியவந்துள்ளது.
மூன்று வாலிபர்களுடன் ஒரு பெண், தமிழகத்திற்கு எதிராக கோஷமிட்டுச் சென்றதாகவும், தன்னோடு சேர்ந்து வாகனங்களுக்கு தீ வைக்க வருமாறு அந்த பெண் அழைப்புவிடுத்ததாகவும் வாக்குமூலத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த பெண்மணிக்கு போட்டி டிராவல்ஸ் நிறுவனத்தோடு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. நாங்கள் அனைத்து கோணத்திலும் விசாரித்து வருகிறோம். கைது செய்யப்பட்டவர்களுக்கு அந்த பெண் குறித்து எதுவும் தெரியவில்லை. அவரை தேடி வருகிறோம் என்று தெரிவித்தார்.
இந்த பெண்மணி முகத்தில் துணி கட்டிக்கொண்டு வன்முறை வெறியாட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கேபிஎன் உரிமையாளர் நடராஜன் கூறுகையில், சுமார் 300 பேர் கொண்ட கும்பல் பஸ்களை தீக்கிரையாக்கியுள்ளது. நியாயம் கேட்டு கர்நாடக அரசிடமும் மனு அளிக்க உள்ளேன் என்றார்.