ஜார்க்கண்ட் 2வது கட்ட சட்டசபை தேர்தல்.. 62.40% வாக்குகள் பதிவு
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற, 2வது கட்ட தேர்தலில், 62.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல், கடந்த 2014ம் ஆண்டு, நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிவு, அந்த ஆண்டு, டிசம்பர் 23ம் தேதி வெளியானது.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஜார்க்கண்ட் உருவாக்கப்பட்ட பின்னர், மாநில சட்டசபையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றது இது முதல் தடவையாகும், பாஜக மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 42 தொகுதிகளை வென்றது.
ரகுவர் தாஸ் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 10 வது முதல்வராக 2014 டிசம்பர் 28 அன்று பதவியேற்றார். பிப்ரவரி 11ம் தேதி, 2015 அன்று 6 ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்) எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர். இந்த நிலையில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைவதால், இந்த ஆண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக போராடி வருகிறது. இந்த நிலையில் இன்று 20 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணிவரை நடந்தது. 62.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. நக்சலைட் ஆதிக்கம், தாக்குதல் உள்ளிட்டவை இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் முன் வைக்கப்பட்டன.