கடற்படையின் என்பி 2 இலகு ரக போர் விமான வெள்ளோட்டம் வெற்றி!
பெங்களூரு: இந்திய கடற்படைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக போர் விமானத்தின் 2வது புரோட்டோடைப் விமான வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
என்பி2 என அழைக்கப்படும் இந்த விமானத்தின் வெள்ளோட்டம் பெங்களூரில் நடந்தது. இது முழுமையாகவும், வெற்றிகரமாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பிற்பகலில் பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் 35 நிமிட நேரம் பறந்து பின்னர் தரையிறங்கியது. இந்த விமான வெள்ளோட்டம் வெற்றிகரமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை பரிசோதனை பைலட் கேப்டன் சிவநாத் தாஹியா இந்த விமானத்தை செலுத்தினார். இந்த விமான வெள்ளோட்டத்தின்போது தேஜாஸ் எஎல்பி2 விமானம் ஒன்று சேஸிங் விமானமாக பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தை கேப்டன் சுனீத் கிருஷ்ணா செலுத்தினார்.
என்பி1 ன் குறைபாடுகள் நீக்கம்
என்பி1 விமானத்தில் இருந்த குறைபாடுகள் பலவும் இந்த என்பி 2 விமானத்தில் நீக்கப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் என்பி 1 விமானம் கோவாவ் கடலோர வெள்ளோட்ட சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
என்பி2 சோதனை குறித்து எச்ஏஎல் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்திய கடற்படைக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது போல பெரும்பாலான ஏவியானிக் ஹார்ட்வேர் பாகங்கள் என்பி 2 விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின்போது, இந்திய விமானம் தாங்கிக் கப்பல்களுக்கேற்றார் போன்ற தேவைகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
இந்தியாவின் சுயசார்பு போர் விமானத் தயாரிப்புத் திட்டத்தில் இந்த சோதனை ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
ராஜு பாராட்டு
இதற்கிடையே, ஏஆர்டிசி எனப்படும் விமான ஆய்வு மற்றும் வடிவமைப்பு மையத்தின் பொறியாளர்களின் சீரிய பணிக்கு எச்ஏஎல் தலைவர் சுவர்ண ராஜு பாராட்டு தெரிவித்துள்ளார்.
என்பி 2 விமானத்தின் மிகவும் சிக்கலான லேன்டிங் கியர் வடிவமைப்புக்காக இந்த பாராட்டுதல்களை அவர் தெரிவித்துள்ளார். வழக்கமாக இந்திய விமானப்படை விமானங்களில் உள்ளதைப் போல அல்லாமல் வேறு மாதிரியாக இதை வடிவமைத்ததே இந்த வெள்ளோட்டம் சிறப்பாக இருந்ததற்கு முக்கியக் காரணமாகும்.
ஏடிஏ இயக்குநர் பி.எஸ்.சுப்ரமணியம்தான் வடிவமைப்புக் குழுக்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்தார். இதுகுறித்து எல்சிஏ கடற்படைக்கான ஓய்வு பெற்ற திட்ட இயக்குநர் சி.டி.பாலாஜி கூறுகையில், என்பி 2 வகையானது தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்டதாகும் என்றார்.
பி.எஸ்.சுப்ரமணியம் கூறுகையில், என்பி 2 விமானத்தின் முதலாவது வெள்ளோட்டம், நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் அயாரத உழைப்புக்கு சரியான சான்றாக அமைந்துள்ளது. தற்போது ஒரு பயிற்சி விமானம் மற்றும் போர் விமானம் நம்மிடம் தயாராகியுள்ளது. எனவே நமது திட்டம் திட்டமிட்டபடி சரியான பாதையில் போய்க் கொண்டுள்ளது என்பதை பெருமையுடன் கூற முடியும் என்றார் அவர்.