ரபேல் ஒப்பந்தம்.. ராகுல் காந்தி ஆவேச பேச்சு.. ஆதாரத்தோடு மறுத்த நிர்மலா சீதாராமன்!
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் லோக்சபா உரையால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உடனடியாக சில ஆவணங்களை கொண்டு வந்து, அதற்கு விளக்கம் அளித்தார்.
மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரான்ஸிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் இதற்காக அவர் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
முன்னறிவிப்பு இன்றி இவ்வாறு தனிப்பட்ட முறையில், குற்றம் சாட்டியது அவை விதிமுறைகளுக்கு எதிரானது என்று, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த்குமார் சுட்டி காட்டினார்.
இருப்பினும் ராகுல் காந்தி வெவ்வேறு விவகாரங்களை முன் வைத்து மோடி அரசை விளாசி தள்ளிவிட்டார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தை வெளிப்படையாக தெரிவிக்க கூடாது என்று எந்த ஒப்பந்தமும் இல்லை. நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார் என்றார் ராகுல் காந்தி.
இதனிடையே புயலை கிளப்பிய ராகுல் காந்தி பேச்சுக்கு பிறகு, நிர்மலா சீதாராமன் அவசரமாக சில ஆவணங்களை அவைக்கு கொண்டு வந்து ராகுல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாதத்தில் இவ்வாறு அமைச்சர் குறுக்கிட்டு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றபோதிலும், விஷயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நிர்மலா சீதாராமன் அவசரமாக மறுக்க வேண்டிய நிலைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
நிர்மலா சீதாராமன் கூறுகையில், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி 2008ம் ஆண்டில், ரபேல் ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற ஷரத்தில் கையெழுத்திட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் ஒரு இன்டர்வியூவிலும், பிற நிறவனங்களின் போட்டி காரணமாக, ஒப்பந்த விவகாரங்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என கூறியுள்ளார் என்று விளக்கம் அளித்தார் நிர்மலா சீதாராமன். இதற்கான ஆவணங்களையும் காண்பித்தார். பிரான்ஸ் அரசும் கூட இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில், ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற ஷரத்து 2008லேயே கையெழுத்திடப்பட்டதுதான் என்று கூறி ராகுல் காந்தி பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக தெரிவித்தது.