பெங்களூரு- மாண்டியாவில் மேலும் 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு! #cauvery
பெங்களூரு: தமிழகத்துக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில் பெங்களூரு மற்றும் மாண்டியாவில் மேலும் 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தினமும் 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ந்தேதி வரை தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு உச்சநீதிமன்றம் கடந்த 12-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
அவ்வளவுதான்... பெங்களூரில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனால் பெங்களூரில் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதில் ஊரடங்கு உத்தரவு நேற்று காலை திரும்பப் பெறப்பட்டது. ஆனால் 144 தடை உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது.,
பெங்களூரு, மாண்டியாவில் 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே பெங்களூர், மாண்டியாவில் வரும் 25-ந் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.