பெங்களூரு, மைசூர் நகரங்களில் 144 தடை உத்தரவு அமல்- முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை!
பெங்களூரு: தமிழர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பெங்களூரு, மைசூரு நகரங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.
காவிரியில் செப்டம்பர் 20-ந் தேதி வரை தமிழகத்துக்கு தினசரி 12,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று புதியதாக உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் பெரும் வன்முறை வெடித்தது.
தமிழர் நிறுவனங்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டன. தமிழக வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பெங்களூருவில் மட்டும் 35 லாரிகள் ஒரே நாளில் தீ வைத்து எரிக்கப்பட்டன.
ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அப்போது போலீசார் அதை மறுத்தனர். இந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக ட்விட்டரில் போலீசார் அறிவித்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மைசூரிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுக்குமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.