ஓரினச் சேர்க்கை குற்றமா, இல்லையா? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன பதிலை பாருங்கள்
Recommended Video
டெல்லி: ஓரினச் சேர்க்கை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றமே முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்றும், தங்களுக்கு எந்த கருத்தும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டப் பிரிவு 377 இக்கால கட்டத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும், இது தனிமனித சுதந்திரத்தை தடை செய்யும் சட்டம் என்றும் பரலவலான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இது குறித்து கடந்த 2009ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பான ஒரு வழக்கில் சட்டப் பிரிவு 377 செல்லாது என்றும், ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதமுடியாது என்றும் தீர்ப்பளித்தது.
ஆனால், 2013 ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் 'சட்டப் பிரிவு 377 செல்லும்' என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், நாடாளுமன்றம் இந்த சட்டப்பிரிவை நீக்கிக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இதையடுத்து, சட்டப் பிரிவு 377ஐ முழுவதுமாக சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது குறித்தான வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், கன்வில்கர், சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாாரிக்கப்பட்டு வருகிறது.
2வது நாள் விசாரணை இன்று நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் ஆஜரான அடிடஷனல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா, இந்த வழக்கில், நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம் என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், "இரு தனிப்பட்ட வயதுக்கு வந்த நபர்கள் விருப்பத்தின் பேரில் தனி இடத்தில் உறவு வைத்துக்கொள்வது தனி மனித சுதந்திரமா இல்லையா என்ற கேள்விக்கான பதிலை, உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கே மத்திய அரசு விட்டுவிடுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், துஷார் மேதா தனது வாதத்தின்போது, எல்லாவற்றையும் தனி மனித சுதந்திரம் என கூறினால், நாளையே, ஆணோ அல்லது பெண்ணோ அவர்களின் சகோதர, சகோதரி உறவு முறை கொண்டவர்களை திருமணம் செய்ய விரும்பினால் அதையும் அனுமதிக்க வேண்டிவரும் என்று எச்சரித்தார்.
இதனிடையே, கேரளாவை சேர்ந்த ஜோசப் ஷினே என்பவர், தொடர்ந்த மற்றொரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தனது கருத்தை முன் வைத்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் 497ல் படி, தனது மனைவி அல்லாத வேறு பெண்ணுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வதை குற்றம் என வரையறுக்கும் அம்சத்தை நீக்க கூடாது என மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. அந்த சட்டப்பிரிவை நீக்குவது, திருமண பந்தத்தை சிதைத்துவிடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.