ஓரினச்சேர்க்கை குற்றமில்லை.. சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டது.. உச்ச நீதிமன்றம் அதிரடி
பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லி: பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை இந்திய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. கடந்த ஜூலை 17ம் தேதி இந்த வழக்கு மீதான அனைத்து வாதங்களும் முடிந்தது.
அதன்பின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்திய நீதித்துறை வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது.
என்ன சட்டம்
இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 என்பது பாலியல் உறவுமுறைகளை வரையருக்கும் சட்ட பிரிவு ஆகும். இதன்படி இயற்கைக்கு எதிரான முறையில் செய்யப்படும் பாலியல் உறவுகள் அனைத்து சட்டத்திற்கு எதிரானது. இதன் மூலம் ''ஆண்- ஆண்'', ''பெண்- பெண்'' உறவு கொள்ளும் ஓரின சேர்க்கை தவறானது என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், தன் பாலின ஈர்ப்பு இல்லாத மக்கள் செய்யும் சில ''பொதுவான'' பாலியல் உறவு ''பழக்கங்களும்'' தவறானது என்று இந்த சட்டம் கூறுகிறது.
கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் இந்த சட்ட பிரிவுக்கு எதிராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள் போராடி வருகிறார்கள். நாஸ் பவுண்டேஷன் என்ற இயக்கம்தான் இதற்கு எதிராக முதன் முதலில் வழக்கு தொடுத்தது. இந்த நிலையில் தற்போது 22க்கும் அதிகமான நபர்கள் (ஐஐடியில் பட்டம் பெற்ற சிலர் உட்பட) இந்தசட்ட பிரிவிற்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்கள். இவர்கள் அளித்த மறுசீராய்வு மனுவில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
என்ன சட்ட வரலாறு
14 ஜூலை 2009 இல் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த சட்ட பிரிவு பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று கூறி, 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனால் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகள் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றது. சட்டத்தை மாற்றுவது நீதித்துறை வேலை இல்லை என்று உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது.
அரசியல் சாசனம்
இந்த நிலையில்தான் இந்த சட்ட பிரிவிற்கு எதிராக 9 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறு சீராய்வு மனுக்கள் மீது இந்த வருட தொடக்கத்தில் விசாரணை நடந்தது. பல்வேறு அமைப்புகள், எழுத்தாளர்கள் இதில் மனுதாரர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஆர். எப் நாரிமன், ஏ எம் கான்வில்கர், டி ஒய் சந்திரசாத், இந்து மல்கோத்ரா அமர்வு விசாரித்தது.
இன்று தீர்ப்பு
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஆர். எப் நாரிமன், நீதிபதி ஏ எம் கான்வில்கர்நீதிபதி டி ஒய் சந்திரசாத், நீதிபதி இந்து மல்கோத்ரா அமர்வு தீர்ப்பளித்ததுதீபக் மிஸ்ரா, ஆர். எப் நாரிமன், டி ஒய் சந்திரசாத், இந்து மல்கோத்ரா தனி தனியாக தீர்ப்பு தீர்ப்பளித்தது. நீதிபதி ஏ எம் கான்வில்கர் தனியாக தீர்ப்பளிக்கவில்லை.
நீக்கம்
இந்த நிலையில் ஐந்து நீதிபதிகளும் ஒரு மனதாக தீர்ப்பு வழங்கினார்கள். அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் சர்ச்சைக்கு உரிய 377 சட்ட பிரிவை நீக்கினார்கள். இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.
சொன்னது என்ன
நான் என்னவாக இருக்கிறேனோ அதுவே நான், என்னை இப்படியே ஏற்றுக்கொள் என்று ஜெர்மன் பொன்மொழியை கூறிவிட்டு தலைமை நீதிபதி தீர்ப்பு வாசித்தார்.இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல.சமுதாயம் மாறினால்தான் முன்னேற்றம் அடையும். மாற்றங்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.மற்ற குடிமகன்களுக்கு இருக்கும் உரிமை தன்பாலின உறவு கொள்பவர்களுக்கும் உண்டு.ஓரினச்சேர்க்கையை குற்றம் என்பது பகுத்தறிவற்றது மற்றும் அவமதிப்பானது என்று நீதிபதிகள் கூறினார்கள்.
|
பெரிய கொண்டாட்டம்
இந்த தீர்ப்பால் ஓரினச்சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். நீதிமன்ற வாசலிலேயே பலர் சந்தோசமாக கோஷமிட்டனர். உலகம் முழுக்க இந்த தீர்ப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.