3வது அணி: நிதிஷ், தேவகவுடா, பிரகாஷ் காரத் ஆலோசனை
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான மூன்றாவது அணி குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா, மார்க்சிஸ் கட்சியின் பிரகாஷ் காரத், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் டெல்லியில் இன்று ஆலோசனை ந்டத்தினர்.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்ற 14 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கியுள்ளன. இந்த அணியின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவ கவுடாவை அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலர் பிரகாஷ் காரத் சந்தித்தார்.
மூன்றாவது அணி - நிதிஷ் ஆலோசனை
இந்த ஆலோசனையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் கலந்து கொண்டார். மூன்றாவது அணி குறித்து மூவரும் விவாதித்தனர்.
இதர கட்சித் தலைவர்களை சந்திக்கும் நிதிஷ்
நாளை வரை டெல்லியில் இருக்கும் நிதிஷ்குமார் மூன்றாவது அணியின் இதர கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.
கொள்கைகள் எப்போது அறிவிப்பு?
முன்னதாக நேற்று கொல்கத்தாவில் பேசிய பிரகாஷ் காரத், நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் மூன்றாவது அணியின் கொள்கைகள் அறிவிக்கப்படும் என்றார்.
யார் பிரதமர் வேட்பாளர்?
இதனிடையே மைசூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் தேவ கவுடா, நான் பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். முலாயம்சிங் யாதவ், நிதிஷ்குமார், ஜெயலலிதா ஆகியோரை பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பேன் என்றார்.