பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க மமதாவை முன்னிறுத்த வேண்டும்: காங்கிரஸின் ரஷீத் ஆல்வி
டெல்லி: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க மாநிலக் கட்சிகளும் மதச்சார்பற்ற சக்திகளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை முன்னிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு காங்கிரஸிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, மாநிலக் கட்சிகளை முன்னிறுத்தி ஆதரவு தரக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரஷீத் ஆல்வி, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் மாநில கட்சிகளும் ஒன்றிணைந்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதாவை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை நிராகரித்துள்ளது. இந்த கருத்து ரஷீத் ஆல்வியின் தனிப்பட்ட கருத்து. தேர்தல் முடிவுகளுக்கு முன்பே இப்படியெல்லாம் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று கூறியுள்ளது.