68வது சுதந்திர தின விழா... தீவிரவாதிகள் மிரட்டலால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
டெல்லி: சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கான வேலைகள் நாடு முழுவதும் துரிதகதியில் நடந்து கொண்டிருக்க, இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு விமானங்களைக் கடத்தப் போவதாக விடுத்துள்ள மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் வெள்ளியன்று நாடு முழுவதும் 68வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. மத்தியில் பாஜக அரசு பதவியேற்றதற்குப் பின் வரும் முதல் சுதந்திர தினமாகையால், மத்திய அரசு டெல்லி சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது.
இதற்கிடையே சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களைச் சீர்குலைக்கும் வகையில் நாசவேலைகள் நடைபெறலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
68வது சுதந்திர தினம்...
இந்தியா சுதந்திரமடைந்து வரும் வெள்ளிக்கிழமையோடு 67 வருடங்கள் முடிவடைகிறது. எனவே, 68வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நாடுமுழுவதும் நடந்து வருகின்றன.
பாதுகாப்புப் பணி...
தேசியக் கொடித் தயாரிப்பு, கலைநிகழ்ச்சிகள், பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்தும் முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தப் பட்டு வருகின்றன. பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லி...
நாட்டின் மற்ற இடங்களைக் காட்டிலும் தலைநகர் டெல்லியில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் படு விமர்சையாக நடந்து வருகின்றன. காரணம் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததும் கொண்டாட இருக்கின்ற முதல் சுதந்திர தின விழா இது.
மோடி உரை...
எனவே, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதனைப் பொது மக்கள் பார்வையிடும் வகையில் பத்தாயிரம் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேவையான பேருந்துகள்...
இதற்காக செங்கோட்டைக்கு வரும் மக்களை ஏற்றிக்கொண்டு வர போதுமான பேருந்து வசதிகளை டெல்லி போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆகஸ்டு 15ந் தேதியன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் அனைவரும் டெல்லி முழுவதும் கட்டணமின்றி பேருந்து பயணம் செய்யலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
கலைநிகழ்ச்சிகள்...
மூவர்ண உடைகளில் 10000 பள்ளி மாணாக்கர்கள் அமரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகள்...
மேலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக சுதந்திர தின விழாவை கண்டுகளிக்க வருபவர்கள் செல்போன், கேமரா, பைனாக்குலர், ஹேண்ட்பேக், ப்ரீப் கேஸ், சிகரெட் லைட்டர், ட்ரான்சிஸ்டர், டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொண்டு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
பாதுகாப்பு வளையம்...
செங்கோட்டையைச் சுற்றி சாலை மார்க்கமாக மட்டுமின்றி, வான் மார்க்கமாகவும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விமானப்படை விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
வாகனங்கள்....
முன்அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே விழா பகுதிக்குள் அனுமதிக்கப் படும் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்திட பொதுமக்கள் உதவிட வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மிரட்டல்...
இதற்கிடையே இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு விமானங்களைக் கடத்தப் போவதாக விடுத்துள்ள மிரட்டலால் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பலம்...
மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சுதந்திர தினக் கொண்டாட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாவண்ணம் நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.