பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு!
பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குருக்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போபால்: பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குருக்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு போடப்படும் என்று கூறுகிறார்கள்.
செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.
இந்த மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பவர்களில் ஒருவர்தான் இந்த சாத்வி பிரக்யா தாக்குர். இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
எங்கு போட்டி
சாத்வி பிரக்யா தாக்குர் பாஜக சார்பாக போட்டியிடுகிறார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.இது இந்தியா முழுக்க அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது சாத்வி பிரக்யா தாக்குர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சிறையில் இருந்து இவர் பெயிலில் வெளியே வந்து தற்போது பாஜக சார்பாக போபாலில் போட்டியிடுகிறார்.
என்ன பிரச்சனை
இந்த நிலையில் சாத்விக்கு அளிக்கப்பட்டு இருக்கும் போலீஸ் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இவருக்கு இதுவரை இரண்டு போலீசார் மட்டுமே பாதுகாப்பு வழங்கி வந்தார்கள். தற்போது 5 போலீசார் வரை பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
காரணம்
அதேபோல் இவரது வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த செவ்வாய் கிழமை இவர் போபாலில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது ஒரு இளைஞர் இவரை பார்த்து கருப்பு கொடியை காட்டினார். இதையடுத்து இவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மிக மோசம்
இவருக்கு விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரிய விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது. இவர் மலேகான் குண்டுவெடிப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறார். தற்போது உடல்நிலையை காரணம் காட்டித்தான் இவர் பெயிலில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.