சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு.. இரவுகளில் தீவிர வாகன சோதனை!
டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 69வது சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போதும் பாதுகாப்பு பலப்படுத்துவது வழக்கம்தான்.
ஆனால் இந்த ஆண்டு சமீபத்தில்தான் பஞ்சாயில் பெரும் தீவிரவாதத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனவே, தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தலைநகர்
டெல்லியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைப் புறங்களில் ராணுவத்தினர் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளது.
விமானப் பயணிகளுக்கு அறிவுரை
டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை விமான நிலையங்களில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானப் பயணிகள் இரண்டு மணி நேரம் முன்பாகவும், பன்னாட்டு விமானப் பயணிகள் இன்னும் சில மணி நேரங்கள் முன்பாகவும் விமான நிலையத்துக்கு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க இந்த நிலை அமலில் இருக்கும்.