இந்திய ராணுவத்திற்கு எதிராக பேச்சு.. அமனெஸ்டி இண்டர்நேஷனல் மீது தேசவிரோத வழக்கு
பெங்களூரு: இந்திய ராணுவத்திற்கு எதிராக பேசியதாகக் கூறி, அமனெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பினர் மீது தேசவிரோத வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது அமனெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போர், ஈரான், ஈராக்கில் நடைபெற்று வரும் போர் உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகளின் மீது கவனம் குவித்து மனித உரிமைகளை பேசி வரும் இந்த அமைப்பின் மீது தேச விரோத வழக்கு தொடப்பட்டுள்ளது.
அமனெஸ்டி அமைப்பினர் பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் காஷ்மீரில் நடைபெறும் வன்முறைகள் குறித்த கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர்.
அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, அகில பாரதிய வித்யார்தி பரிஷத் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, போலீசில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ஏபிவிபி அமைப்பின் செயலாளர் ஜெயபிரகாஷ் அளித்துள்ள அந்தப் புகாரில், அமனெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பினர் தீவிரவாதத்திற்கு ஆதரவாகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பேசினார்கள் என்றும் ராணுவத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏபிவிபியின் இந்த செயலுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து மனித உரிமை குழுவினர் கூறும் போது, பெங்களூரு போலீசாரிடம் முறைப்படி முன்கூட்டியே அறிவித்துவிட்டுத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றும், இந்த நிகழ்ச்சிக்கு காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் பிரதி அழைக்கப்பட்டு பேச வைக்கப்பட்டதையும் குறிப்பிட்டனர்.
இதுகுறித்து அமனெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் செயல் இயக்குனர் ஆகார் பட்டேல் பேசும் போது, அரசியல் அமைப்பின்படி ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தால் கூட அது இந்தியாவிற்கு விரோதமான ஒன்றாக மாற்றப்படுகிறது. குற்றமாக கருதப்படுகிறது. நாங்கள் நடத்திய நிகழ்விற்கு போலீசார் அழைக்கப்பட்டு அவர்களும் கலந்து கொண்டனர். ஆனாலும் எங்களுக்கு எதிராக தேச விரோத வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளதை காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.