திருப்பதி பாலாஜி கோவில் சொத்துக்கள் சீமாந்திராவுக்கே சொந்தம்: தேவஸ்தானம்
திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் சீமாந்திராவிற்கே சொந்தம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா, சீமாந்திரா என 2 மாநிலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஜூன் 2-ந்தேதி 2 மாநிலமும் அதிகாரப் பூர்வமாக பிரிகிறது.
இதையொட்டி அரசு ஊழியர்கள், அரசின் சொத்துக்கள், கார்கள் மற்றும் அரசு கோப்புக்கள் ஆகியவை இருமாநிலத்துக்கும் பிரிக்கப்பட்டு வருகிறது.
ஏழுமலையான் கோவில் சொத்து
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் சீமாந்திராவில் உள்ளது. நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டும் கோவிலாக திருப்பதி உள்ளது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது.
சீமாந்திராவிற்கே சொந்தம்
தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளது. மாநிலம் பிரிக்கப்பட்டாலும் தெலுங்கானாவில் உள்ள திருப்பதி கோவில் சொத்துக்கள் சீமாந்திராவுக்கே சொந்தம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக கோவில் சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டு உள்ளது.
ஆண்டுக்கு ரூ.2000 கோடி வருமானம்
திருப்பதி பாலாஜி கோவிலுக்கு தினந்தோறும் 50000 பக்தர்களுக்கு மேல் வருகை தருகின்றனர். உண்டியல் வருமானம் மட்டும் தினசரி 2 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது. ஆண்டுக்கு ரூ.2000 கோடி வருமானம் வருகிறது.
பணக்கார கோவில்கள்
திருப்பதி கோவில் மட்டுமல்லாது ஆண்டுக்கு பத்து கோடிக்கு மேல் வருமானம் வரக்கூடிய 16 முதல் 19 கோவில்கள் சீமாந்திர மாநிலத்தின் வசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.