சீமாந்திராவின் புதிய "சிங்கப்பூரை" நிர்மானிக்க உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்யும் நாயுடு அரசு!
ஹைதராபாத்: மலேசியாவில் ஒதுக்கப்பட்ட சிங்கப்பூர் எப்படி பின்னாளில் மிகப் பெரிய அருமையான நாடாக, நகரமாக உருவெடுத்ததோ அதேபோல தற்போது தெலுங்கானாவிடம் ஹைதராபாத்தைப் பறி கொடுத்துள்ள நிலையில் புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கும் சீமாந்திரா அரசு, புதிய தலைநகரை சிங்கப்பூர் போல அதி நவீன வசதிகளுடன் கூடிய நகரமாக உருவெடுக்க தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.
சிங்கப்பூரைப் போலவே அனைத்து வசதிகளையும் கொண்ட அற்புதமான நகராக புதிய தலைநகரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு.
இதற்காக அது பல வழிகளிலும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக புதிய நகருக்குத் தேவையான நிதிய மக்களிடம் வசூலிப்பதற்காக உண்டியல் ஏந்தியும் அது நிதி வசூலில் ஈடுபட்டுள்ளது.
சிங்கப்பூரில் நேரில் ஆய்வு
சிங்கப்பூருக்கு நேரில் போய் அந்த நகரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய நாயுடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 2 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு சிங்கப்பூர் செல்லவுள்ளது.
நிதி வசூல்
மறுபக்கம் புதிய தலைநகருக்கு மக்களிடமிருந்து நிதி சேகரிக்க்த தொடங்கியுள்ளனர். பொதுமக்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள் தாராளமாக நிதி வழங்கும்படி சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக தனியாக வங்கி கணக்கு ஒன்றும் தொடங்கி உள்ளார்.
உண்டியல் மூலமும் வசூல்
ஹைதரபாத்தில் உள்ள சீமாந்திர மாநில தலைமைச் செயலகத்தில் எல்.பிளாக் பகுதியில் தலைநகருக்கு நிதி திரட்ட பெரிய உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
உண்டியலில் பணம் போடலாம்
இந்த உண்டியலில் அனைவரும் தங்களது நிதியைச் சேர்க்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் இங்கு வருவதால் தாராளமாக நிதி கிடைக்கும் என அரசு கருதுகிறது. விரைவில் மேலும் 2 உண்டியல் வைக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது.
10 வருடங்களுக்குப் பிறகு
முதல் பத்து வருடங்களுக்கு ஹைதராபாத், இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சீமாந்திரா தனக்கென புதிய தலைநகரை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.