கடைசி நேரத்தில் 'ட்விஸ்ட்' வைத்த மோடி: கடுப்பில் பதவியேற்பு விழாவை புறக்கணித்த சிவசேனா
டெல்லி: மோடி அமைச்சரவையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்ட விழாவை சிவசேனா புறக்கணித்துள்ளது.
பிரதமர் மோடி இன்று தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். அமைச்சரவையில் சிவசேனா சார்பில் அந்த கட்சி எம்.பி. அனில் தேசாய்க்கு கேபினட் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அனில் தேசாயும் பதவியேற்க இன்று மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்தார். ஆனால் மோடி கடைசி நேரத்தில் சிவசேனா பரிந்துரைக்காத அக்கட்சியை சேர்ந்த சுரேஷ் பாபுவுக்கு கேபினட் பதவி வழங்கினார்.
இதையடுத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அனில் தேசாயை மும்பைக்கு திரும்பி வருமாறு தெரிவித்தார். மேலும் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழாவை சிவசேனா புறக்கணித்துவிட்டது. ஆனால் சிவசேனாவின் சுரேஷ் பாபு கேபினட் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
மகாராஷ்டிரா சட்டசபை விவகாரத்தில் பாஜக-சிவசேனா இடையேயான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் கேபினட் விவகாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.