காஷ்மீர் ஆதரவு பேச்சு... பாக். தூதரை வெளியேற்ற கட்சிகள் வலியுறுத்தல்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் விடுதலையை ஆதரிப்பதாக பேசிய பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பாகிஸ்தானின் சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அப்துல் பாசித், ஜம்மு-காஷ்மீரின் நிலவரம் கவலையளிப்பதால், பாகிஸ்தானின் இந்த சுதந்திர தினத்தை ஜம்மு-காஷ்மீரின் சுதந்திரத்துக்காக அர்ப்பணிக்கிறோம்.
தியாகங்கள் வீணாகாது
ஜம்மு-காஷ்மீர் மக்கள் இதுவரை செய்த தியாகங்கள் வீணாகாது என்று உறுதியாக நம்புகிறோம். ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பதற்றம் முடிவுக்கு வர வேண்டும்.
சுயநிர்ணய உரிமை
ஜம்மு -காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை கிடைக்கும் வரையிலும், அவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்க ரீதியிலும், அரசியல் மற்றும் தார்மீக ரீதியிலும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.
ஆதரவு தொடரும்
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எதிராக எவ்வளவு பெரிய படைபலத்தை பயன்படுத்தினாலும், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றார் அவர். இதேபோல், இஸ்லாமாபாதில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹுசைன், ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு அவர்களது சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் பாகிஸ்தானின் ஆதரவு தொடரும் என்றார்.
வெளியேற்ற வலியுறுத்தல்
பாகிஸ்தான் தூதரின் இந்த பேச்சுக்கு பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாட்டில் இருந்து பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை உடனே வெளியேற்ற வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
இழுத்து மூடுக
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர் சஞ்சய் செளத், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை இழுத்து மூடிவிட்டு 24 மணிநேரத்துக்குள் பாகிஸ்தான் தூதரை இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.