இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பியதே தவறு!- மத்திய அமைச்சர் வி.கே.சிங்
ராய்ப்பூர்: கடந்த 1987ஆம் ஆண்டில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பியதே தவறு, என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், முன்னாள் ராணுவத் தலைமை தளபதியுமான வி.கே.சிங் கூறினார்.
உத்தரகண்ட் மாநிலம் ராய்ப்பூரில், "தைரியமும், தண்டனையும்' என்ற தனது சுயசரிதை தொடர்பான நிகழ்ச்சியில் வி.கே.சிங் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான சண்டையில், இலங்கை அரசுடனான உடன்படிக்கையின் மூலம் இந்தியா நுழைந்தது, கொள்கை ரீதியில் தோல்வியாகும். இந்தியப் படையால் விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பல்வேறு காரணங்களால், இந்தத் தோல்வி ஏற்பட்டது. இந்திய ராணுவத்தால் அமைதியை ஏற்படுத்த முடியாமல், போரில் சிக்கிக்கொண்டது.
ஒருகட்டத்தில், இந்திய அமைதிப்படைக்கு எதிராக அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசா, விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டார்.
மாவோயிஸ்ட் பகுதிகளில் ராணுவம் எதற்கு?
மாவோயிஸ்ட் அச்சுறுத்துதல்களுக்கு எதிராக, நமது படைகள் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. அவர்களின் பகுதிகளில் நுழையும் ராணுவத்தினர், நமது சொந்த மக்களையே தாக்க வேண்டியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் 76 ராணுவ வீரர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர்.
அந்த நேரத்தில், மாவோயிஸத்துக்குப் பின்னணியில் உள்ள காரணத்தை நாம் ஆராய வேண்டும் என்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கூறினேன்.
மாவோயிஸ்ட் பகுதிகளில் ராணுவத்தினரைக் குவிப்பதால், ராணுவத்தின் மீதான நன்மதிப்பு களங்கப்படுகிறது," என்றார் வி.கே.சிங்.