காங்கிரஸில் கலகம்.. விலகினார் ஜோதிராதித்யா சிந்தியா.. ராஜினாமாவை சோனியாவுக்கு அனுப்பினார்
போபால்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தமது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்திருக்கிறார் ஜோதிராதித்யா சிந்தியா.
Recommended Video
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா, கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றது முதலே ஒவ்வொரு பிரச்சனையிலும் குடைச்சலை கொடுத்து வந்தார். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசுக்கு தலைக்கு மேல் தொங்கிய கத்தியாக சிந்தியா இருந்து வந்தார். அவருக்கு மறைமுகமான ஆதரவை மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்கும் வழங்குவதாகவும் கூறப்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்குள் இத்தகைய நெருக்கடியை எதிர்கொண்ட கமல்நாத் அரசை எப்படியும் கவிழ்த்தே தீருவது என்பதில் இன்னொரு பக்கம் பாஜக படுதீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டது. பாஜகவின் இந்த முயற்சிகளை கமல்நாத் ஒவ்வொருமுறையும் முறியடித்தும் வந்தார். கடந்த வாரம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக கடத்தியதாக புகார் கூறப்பட்டது. இதற்கு பதிலடியாக பாஜக எம்.எல்.ஏக்களை தாங்கள் வைத்துவிட்டோம் என்றது கமல்நாத்.
கலகக் குரல் எழுப்பும் சிந்தியா
இந்த குழப்பங்களுக்கு இடையே ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 17 பேர் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். இவர்களை சமாதானப்படுத்த அமைச்சரவையை விரிவாக்க கமல்நாத் முடிவு செய்துள்ளார். இதற்காக 20 அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை கமல்நாத்திடம் கொடுத்திருக்கின்றனர். இதனிடையே இன்று பகல் 12 மணிக்கு போபாலில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
போபாலில் ஆளுநர்
மேலும் இன்று இரவு 7 மணிக்கு பாஜகவும் தமது எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. இதற்காக டெல்லியில் முகாமிட்டிருந்த முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் இன்று காலை போபால் திரும்பியுள்ளார். தற்போதைய குழப்பமான அரசியல் சூழ்நிலைகளால் மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டனும் அவசரமாக போபால் திரும்பியுள்ளார்.
சிவராஜ்சிங் சவுகான் கருத்து
இந்நிலையில் கமல்நாத் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், இது காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரம்; இதில் பாஜக செய்வதற்கு எதுவுமே இல்லை என கூறியுள்ளார். மற்றொரு பாஜக மூத்த தலைவர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், சிந்தியா மிகப் பெரும் தலைவர்; அவர் பாஜகவில் இணைவதை வரவேற்கிறோம் என கூறியுள்ளார்.
காங்கிரஸில் இருந்து விலகினார் சிந்தியா
இந்நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்ச அமித்ஷாவை ஜோதிராதித்யா சிந்தியா இன்று டெல்லியில் சந்தித்தார். இச்சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஜோதிராதித்யா சிந்தியா அறிவித்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.