145 நாட்கள்,3500 கி.மீ- ராகுல் காந்தி யாத்திரை ஸ்ரீநகரில் நிறைவு- லால் சவுக்கில் தேசிய கொடியேற்றம்!
ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 145 நாட்களாக மேற்கொண்டு வரும் பாதயாத்திரை ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. நாளை ராகுல் பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பாரத் ஜோடோ யாத்திரை- இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தமது பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார்.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களைக் கடந்து தற்போது ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் யாத்திரை இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. கடந்த 145 நாட்களாக 3,500 கிமீ தொலைவு பாதயாத்திரை மேற்கொண்ட ராகுலின் இந்த நெடும் பயணம், ஸ்ரீநகரில் நாளை நிறைவடைகிறது.
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், துறைசார் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். 14 மாநிலங்களின் 72 மாவட்டங்களை கடந்து 132-வது நாளில் ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் இறுதிகட்ட பாதயாத்திரை தொடங்கியது. ராகுல் காந்தியின் யாத்திரையில் அவரது தாயாரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்கள்.. அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் திமுக எம்பிக்களும் பங்கேற்றனர். திமுக கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவனும் பங்கேற்றார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் ராகுல் காந்தி யாத்திரையில் தம்மை இணைத்துக் கொண்டார். மேலும் நாடு தழுவிய அளவில் பாஜகவுக்கு எதிரான பெரும்பாலான அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் இந்த யாத்திரையில் இணைந்து ஆதரவும் தெரிவித்தனர். ராகுலின் இந்த யாத்திரையில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மனித உரிமை ஆர்வலர் மேதா பட்கர், சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷண், மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி என ஏராளமான பிரபலங்கள் ராகுல் காந்திக்கு ஆதரவை தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் தலைவர்களான பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோரும் ராகுல் யாத்திரையில் கை கோர்த்தனர்.
கடந்த சில மாதங்களாக ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை தேசிய அரசியலில் பேசுபொருளாக இருந்து வருகிறது. ராகுல் காந்தியின் டி ஷர்ட் முதல் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பாஜகவினரால் விமர்சிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் பதில் தரப்பட்டது. ராகுல் காந்தியின் யாத்திரையை மையமாக வைத்து மத்திய பாஜக அமைச்சர்கள் பலரும் விமர்சித்தும் வந்தனர். ஜம்மு காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரை நடைபெற்று வந்தபோதுதான் குண்டுவெடிப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. ராகுல் காந்தி யாத்திரையின் பாதுகாப்பில் குளறுபடிகள் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது.
இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த நெடும் பயணம்- யாத்திரை இன்றுடன் நிறைவடைந்தது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று ராகுல் காந்தி தேசிய கொடி ஏற்றினார். நாளை ராகுல் பாதயாத்திரையின் நிறைவு பொதுக் கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெறுகிறது. இந்த நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 23 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பி உள்ளார். ராகுல் காந்தியின் இந்த யாத்திரை 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமையில் பாஜகவுக்கு எதிரான பெரும்பாலான எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரள்வதை ராகுலின் இந்த யாத்திரை உறுதி செய்யும் என்கின்றனர் மூத்த அரசியல் தலைவர்கள்.