3வது தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்... முழுத் தகுதியை பெற்றது ஆணையம்!
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் பதவியேற்றார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையாராக இருந்த நஜிம் ஜைதியின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்ததையடுத்து அவரது இடம் காலியானது. இதனையடுத்து தேர்தல் ஆணையராக இருந்த அச்சல்குமார் ஜோதி தேலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதே போன்று ஓம் பிரகாஷ் ராவத் மற்றொரு தேர்தல் ஆணையராக செயல்பட்டு வந்த நிலையில் 2வது தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில் சட்ட அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலாளராக உள்ள சுனில் அரோரா மூன்றாவது தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் முழுத்தகுதி பெற்றுள்ளது.
சுனில் அரோராவின் பதவிக்காலம் அவர் பதவியேற்கும் நாள் முதல் தொடங்கும் என சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அரோரா, 1980ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1993 முதல் 1998ம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநில முதல்வரின் செயலாளராக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர், 1999 முதல் 2002 வரை உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சக துணை செயலாளராக பணியாற்றினார். 2005 முதல் 2008ம் ஆண்டுவரை ராஜஸ்தான் மாநில முதல்வரின் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த அவர், இறுதியாக தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை செயலாளர் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.