அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம்.. உறுதிமொழி ஏற்ற ஐபிஎஸ் அதிகாரி!
அயோத்தியில் ராமர்கோவில் கட்டியே தீருவோம் என ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உறுதிமொழி ஏற்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: அயோத்தியில் ராமர்கோவில் கட்டியே தீருவோம் என ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உறுதிமொழி ஏற்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது.
ஐபிஎஸ் அதிகாரி உறுதிமொழி
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என ஐபிஎஸ் அதிகாரி உறுதிமொழி ஏற்று உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோவால் சர்ச்சை
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று உத்தரப்பிரதேச மாநில ஊர்க்காவல் துறை டிஜிபி சூர்ய குமார் சுக்லா எடுத்த உறுதிமொழி தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி சுக்லா
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பல்கலைக்கழகத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி சுக்லா பார்வையாளர்கள் முன்னிலையில் ராம பக்தர்களாகியாய் நாம், ராமர் கோவிலை விரைவாக கட்டி முடிப்போம் என்று கூறி உறுதிமொழி ஏற்று உள்ளார்.
விமர்சனங்கள்
இதுதொடர்பாக அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுக்லா உறுதி மொழி ஏற்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.