இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா..
இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
டெல்லி: இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து மேலாண் இயக்குனர் விஷால் சிக்கா இன்று ராஜினாமா செய்துள்ளார்.
அந்நிறுவனத்தில் இருந்து கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்.
இன்போசிஸ் நிறுவனத்தில் மேலாண் இயக்குனராகவும், தலைமைச் செயல் இயக்குனராகவும் இருந்தவர் விஷால் சிக்கா.
விஷால் சிக்கா
அவர் தன்னிடம் இருந்த 2 பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட விமர்சனங்களுக்குக்காக விஷால் சிக்கா ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அனிர்பன் தே
கடந்த சில மாதங்களாகவே இன்போசிஸ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புக்களில் இருக்கும் பலர் ராஜினாமா செய்து வருவது தொடர்கதையாகிவிட்டது. 2015ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் இணைந்த அனிர்பன் தே எட்ஜ் புராடக்ஸின் தலைமைப் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.
யூசுப் பஷீர்
அதே போன்று, இன்போசிஸ் இனோவேஷன் பண்ட்டின் மேலாண் இயக்குநராக 2015ம் ஆண்டு பணியில் சேர்ந்த யூசுப் பஷீரும் தனது பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். 2 ஆண்டுகள் நிறுவனத்தில் பணி செய்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார்.
ரித்திகா சூரி
2014ம் ஆண்டு விஷால் சிக்காவால் இன்போசிஸ் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்வ் வைஸ் பிரசிடெண்டாக கொண்டு வரப்பட்டவர் ரித்திகா சூரி. அவரும் கடந்த மாதம் இந்தப் பொறுப்பில் இருந்து விலகினார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் 2ம் இடத்தில் உள்ள இன்போசிஸ்ஸில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.