ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு எதிரொலி: இந்திய பங்குச் சந்தைகளில் பயங்கர சரிவு!
இந்தியாவின் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் இன்று பயங்கர சரிவை எதிர்கொண்டன.
மும்பை: ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு எதிரொலியாகவும் அமெரிக்க தேர்தல் முடிவுகள் முழுமையான வெளிவராத நிலையிலும் இந்திய பங்கு சந்தைகள் இன்று பயங்கர சரிவை தொடக்கத்தில் சந்தித்தன.
இன்று முதல் நாட்டில் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் தாக்கம் இன்று காலை தொடங்கிய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவுடன் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 500 புள்ளிகளுக்கு அதிகமான சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது. இந்த தொடக்க சரிவில் இருந்து பங்குச் சந்தைகள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன.