சம்பந்தமே இல்லாமல் எகிறிய சென்செக்ஸ்.. கசிந்த 'எக்ஸிட் போல்' காரணம் என்று பேச்சு!
டெல்லி: சம்பந்தமே இல்லாமல் நேற்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயர்வைச் சந்தித்தது. இதற்கு நரேந்திர மோடி எபக்ட்தான் காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதாவது மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் என்று இதுவரை நடத்தப்பட்ட எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகள் கூறுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்தே பங்குச் சந்தையில் உயர்வு காணப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவில் 23,000 புள்ளிகளைத் தாண்டியது. இருப்பினும் நேற்று மாலையில் அது சற்று குறைந்து 22,994.23 என்ற அளவில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் இருந்தது.
இருப்பினும் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஒரே நாளில் 650 புள்ளிகள் என்ற உயர்வை சென்செக்ஸ் சந்தித்தது இதுவே முதல் முறை என்பதால் பங்குச் சந்தை வட்டாரத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது.
வங்கித் துறை, ஆட்டோமொபைல், மின்சாரத் துறை பங்குகளை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டினர்.
ஐசிஐசிஐ, டாட்டா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்கு மதிப்பிலும் நல்ல உயர்வு காணப்பட்டது.
அதேபோல நிப்டியும் 198.95 புள்ளிகள் உயர்ந்து 6858.80 ஆக இருந்தது.
இத்தனைக்கும் நேற்று உலக அளவில் எந்தவிதமான உயர்வும் இல்லை. உக்ரைன் போரால் ஏற்பட்ட பதட்டம் வேறு இருந்தது. உலக பங்குச் சந்தைகளிலும் பெரிய மாற்றம் இல்லை. எனவே நேற்றைய திடீர் உயர்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இருப்பினும் இதற்குக் காரணம் மோடி விளைவுதான் என்பது நிபுணர்களின் கருத்து. அதாவது மோடி பிரதமராக வருவார், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று சில எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் பங்குச் சந்தை வட்டாரத்தில் கசிந்ததாகவும், இதன் காரணமாகவே பங்குச் சந்தையில் சென்செக்ஸ் உயர்ந்ததாகவும் கூறுகிறார்கள்.
குறிப்பாக டைம்ஸ் நவ் டிவிக்கு மோடி அளித்த பேட்டியின்போது பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று திட்டவட்டமாக கூறியதாலும் பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டதாக கூறுகிறார்கள்.