பழனியப்பனை தொடர்ந்து அடுத்த 'விக்கெட்' காலி.. ரிசார்ட்டிலிருந்த செந்தில் பாலாஜி மாயம்?
Recommended Video
மடிகேரி: முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சரும், தினகரன் ஆதரவு எம்எல்ஏவுமான (மாஜி) செந்தில் பாலாஜியை போலீசார் தேடி வருவதால் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அரசியல் பரபரப்புகளால், கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்திலுள்ள இயற்கை எழில் சூழ்ந்த ஒரு ரிசார்ட்டில், தினகரன் அணி எம்.எல்.ஏ. க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் அனைவரும், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக சபாநாயகர் தனபால் நேற்று காலை அறிவித்தார். அவர்களின் தொகுதியிடங்கள் காலியாக உள்ளதாக நேற்று மாலையே அறிவிப்பு வெளியானது.
வழக்குப்பதிவு
இதையடுத்து, அங்கிருந்த எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர் தங்க தமிழ்செல்வன், அளித்த பேட்டியில் எங்கள் ஆதரவாளர்கள் எல்லோர் மீதும் வழக்கு போடவும் வாய்ப்புள்ளது. வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, பழனியப்பன், முன் ஜாமீனுக்கு முயற்சித்து வருகின்றனர், என்றார்.
போலீசார் குவிப்பு
செந்தில் பாலாஜி, ஜெயலலிதா அமைச்சரவையில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது நடந்த முறைகேடு தொடர்பாக, போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அவரை கைது செய்ய, குடகிலுள்ள ஒரு ஹோட்டலில், தமிழக போலீசார் தங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் தான் கைது செய்யப்படுவோம் என்ற பயம் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டுள்ளது.
தலைமறைவு
எனவே ரிசார்ட்டில் தங்கியிருந்த செந்தில் பாலாஜி, கைது பயம் காரணமாக, அங்கிருந்து தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. நேற்றே அவர் ரிசார்ட்டிலிருந்து ரகசியமாக வெளியேறிவிட்டாராம். தனது வக்கீல் மூலம், முன் ஜாமீன் பெறுவதற்கு முயற்சித்து வருகிறார்.
கடந்தவாரமே கிளம்பிய பழனியப்பன்
இதேபோல வழக்குப்பதிவுக்கு ஆளான மற்றொரு எம்எல்ஏவான பழனியப்பனும், ரிசார்ட்டிலிருந்து தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவரை தேடி கடந்த வாரமே தமிழக போலீசார் ரிசார்ட்டுக்கு சென்றனர். அதற்குள்ளாக அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.