கல்லூரியில் இருந்தே பயிற்சி பெற்ற ஜான்.. சென்டினல் ஆதிவாசிகளை சந்திக்க பல வருட பிளான்!
சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன், கல்லூரி ஒன்றில் நன்கு பயிற்சி கொடுக்கப்பட்ட பின்னரே சென்டினேலீஸ் ஆதிவாசிகளை சந்தித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அந்தமான்: சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன், கல்லூரி ஒன்றில் நன்கு பயிற்சி கொடுக்கப்பட்ட பின்னரே சென்டினேலீஸ் ஆதிவாசிகளை சந்தித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நவம்பர் 14ம் தேதி அந்தமானில் இருக்கும் மர்ம தீவான சென்டினல் தீவில் ஜான் ஆலன் என்ற அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார். பாதுகாப்பு காரணங்களால் சென்டினல் தீவு மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட தீவு ஆகும்.
இந்த நிலையில்தான் கடந்த வாரம் அந்த தீவிற்கு சென்ற போது ஜான் ஆலன் கொலை செய்யப்பட்டார்.
ஏற்கனவே எழுதிய கடிதம்
சென்டினல் தீவிற்கு செல்லும் முன் ஜான் ஆலன் எழுதிய கடிதம் ஒன்று அமெரிக்க நாளிதழ்களில் வெளியானது. அந்த கடிதத்தில் ஜான் ஆலன், ''நான் இங்கே வருவதை வைத்து நீங்கள் என்னை பைத்தியக்காரனாக நினைக்கலாம். ஆனால் இயேசு மீது உள்ள அன்பு காரணமாகத்தான் நான் இங்கு வந்தேன். இயேசுவை வழிபடுவது குறித்து நான் இவர்களிடம் தெரிவிக்க போகிறேன்.'' என்று எழுதி இருந்தார்.
புது தகவல்
கன்சாஸ்-அடிப்படையிலான கிறிஸ்துவ மிஷனரி குழு "ஆல் நேஷன்ஸ்" சமீபத்தில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டு, அனைவரையும் அதிர்ச்சிக்கு உண்டாக்கியுள்ளது. அதில் 2017களில் கிறிஸ்துவ மதபோதகராக தன்னை சேர்த்து கொண்ட ஆலன் , சென்டினேலீஸ் ஆதிவாசி மக்களிடம் கிறிஸ்துவ மதத்தை பரப்ப முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக கல்லூரியிலிருந்து சிறந்த பயிற்சி கொடுக்கப்பட்ட பின்னரே அவர் சென்டினல் தீவு அனுப்பப்பட்டுள்ளார், என்றுள்ளது.
கல்லூரி தந்த பயிற்சி
ஓரல் ராபர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த ஆலன், அந்த கல்லூரியிலேயே சென்டினேலீஸ் ஆதிவாசிகளை கையாளும் முறை பற்றி பயிற்சி பெற்றுள்ளார். முறையான பயிற்சி பெற்ற பின்னரே அந்தமான் தீவுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. ஈராக், குர்திஸ்தான், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப பெரிதும் உதவினார் என்றும் அறிக்கையில் கூறப்படுகிறது.
அந்தமான் போலீஸ் மறுப்பு
ஆனால் இந்த அவர் மிஷனரியை சேர்ந்தவர்தான் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று அந்தமான் போலீஸ் கூறியுள்ளது. அந்தமான் போலீஸ் செய்த முதற்கட்ட ஆய்வின் போது ஆதிவாசிகளிடம் நெருங்கி உரையாட நினைத்து ஜான் ஆலன் அங்கு சென்றார். அதனால்தான் ஜான் தன் உயிரை பறி கொடுத்தார் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.