லிங்காயத்துகளுக்கு தனி மத அந்தஸ்து.. எடியூரப்பா எப்படியெல்லாம் சிக்கியுள்ளார் பாருங்க
Recommended Video
பெங்களூர்: லிங்காயத்துகளை தனி மதமாக கர்நாடக அரசு அங்கீகரித்துள்ள நிலையில், பாஜக முதல்வர் வேட்பாளரும் அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவருமான எடியூரப்பா தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளார்.
அரசின் இந்த முடிவை பகிரங்கமாக எதிர்க்கவும் முடியாமல், வரவேற்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டுள்ளார் எடியூரப்பா.
கர்நாடகாவில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் அரியணை ஏற்றுவதற்கான தீவிர முயற்சிகளில் முதல்வர் சித்தராமையா ஈடுபட்டு வருகிறார். அதில் முக்கியமானது, பாஜகவின் வாக்கு வங்கிகளை பலவீனப்படுத்துவதாகும்.
ஹிந்தி எதிர்ப்பு
பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தியில் இடம்பெற்ற அறிவிப்புகளை கன்னட அமைப்பினர் தார்பூசி அழித்தனர். இதற்கு மாநில அரசு ஊக்கம் கொடுத்தது. ஹிந்தியை தேசிய மொழிபோல முன்னிலைப்படுத்த முயலும் பாஜகவுக்கு இது கோபத்தை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்கள் கண்டித்தனர். இதனால், பாஜகவுக்கு எதிராக கன்னட அமைப்பினரும், கன்னட உணர்வாளர்களும் திரண்டனர். எனவே கர்நாடக பாஜக அந்த விஷயத்தை அப்படியே பூசி மெழுகிவிட்டது.
கர்நாடகாவிற்கு தனிக்கொடி
இந்த சூழ்நிலையில், கர்நாடகாவுக்கு தனி கொடியை சித்தராமையா அறிமுகம் செய்து பாஜகவுக்கு குடைச்சல் கொடுத்தார். இந்த கொடிக்கு மத்திய அரசு இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே, கன்னட ஆர்வலர்களிடையே மத்திய பாஜக அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை சித்தராமையா முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில்தான், கர்நாடகாவில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத்து சமூகத்து மக்களை தனி மதமாக அறிவித்து சிறுபான்மை மதங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அறிவித்துள்ளது கர்நாடக அரசு. கர்நாடக அமைச்சரவை முடிவை அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசிடம் உள்ளது.
எடியூரப்பாவுக்கு சிக்கல்
கர்நாடக பாஜக தலைவரும், அக்கட்சி முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பா, லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர். பாஜகவுக்கு பெரும் வாக்கு வங்கி லிங்காயத்துகள்தான். ஆனால், இந்துக்களாக கருதப்பட்டு வந்த இவர்களை தனி மதமாக அறிவிப்பது பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு எதிரானது. இதனால் லிங்காயத்து அல்லது பாஜக தலைமை என இதில் எந்த பக்கம் சாய்வது என்பது புரியாமல் தவிக்கிறார் எடியூரப்பா.
மவுனமாக இருந்த எடியூரப்பா
லிங்காயத்துகள் தொடர்பாக கர்நாடக அமைச்சரவை திங்கள்கிழமை தனது முடிவை அறிவித்துவிட்ட நிலையிலும், எடியூரப்பா செவ்வாய்க்கிழமை வரை இதுதொடர்பாக கருத்துகூட கூறவில்லை. மீடியாக்களின் தொடர் கேள்வி கணைகளையடுத்து செவ்வாய்க்கிழமை அவர் வாய் திறந்தார். ஆனால், நேரடியாக அவர், அரசு கருத்தை வரவேற்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. அனைத்திந்திய வீரசைவ மகாசபா என்ன முடிவை எடுக்கிறதோ அதுதான் தனது முடிவு என கூறி நழுவினார். இந் அமைப்பு லிங்காயத்துகளின் இரு பெரும் பிரிவுகளான வீரசைவர் மற்றும் லிங்காயத்துகளை ஒரே குடையின் கீழ் நிர்வகிக்கும் அமைப்பாகும்.
திடீர் மாற்றம்
ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், அனைத்திந்திய வீரசைவ மகாசபா, சேர்மேனாக உள்ள சாமனூர் சிவசங்கரப்பா, திங்கள்கிழமை அளித்த பேட்டியயொன்றில், கர்நாடக அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்திருந்தார். எனவே எடியூரப்பாவும் கர்நாடக அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவிப்பதாக அர்த்தமானது. ஆனால், சாமனூர் சிவசங்கரப்பா திடீரென தனது கருத்தை மாற்றிக்கொண்டுள்ளார். அவசரப்பட்டு கருத்து கூறியதாகவும், அனைத்திந்திய வீரசைவ மகாசபா ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் சாமனூர் சிவசங்கரப்பா தெரிவித்துள்ளார்.
லிங்காயத்துகள் எதிர்ப்பு
காங்கிரஸ் அரசின் சாமர்த்தியத்திற்கு பதிலடி கொடுக்க பாஜக கைவசம் நிறைய வாய்ப்புகள் இல்லை. எனவே, அனைத்திந்திய வீரசைவ மகாசபாவை வைத்தே கர்நாடக அரசின் முடிவை எதிர்க்க வைக்க எடியூரப்பா லாபி செய்வதாக கூறப்படுகிறது. இதன் மூலம், கர்நாடக அரசின் முடிவுக்கு லிங்காயத்துகள் எதிர்ப்பு தெரிவிப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குவது மட்டுமே பாஜகவிடம் இப்போதுள்ள ஒரே வாய்ப்பு. இது கஷ்டமான விஷயம் என்பதும் கவனிக்கத்தக்கது.
கசிந்த கடிதம்
இதனிடையே, 2013ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, அனைத்திந்திய வீரசைவ மகாசபா சார்பில் சாமனூர் சிவசங்கரப்பா மனு அனுப்பியுள்ளார். அதில், லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரிக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட்ட பிரமுகர்களில் எடியூரப்பாவும் ஒருவர். இந்த கடிதம் ஊடகங்களில் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எடியூரப்பா இருதலை கொள்ளி எறும்பாக தவித்து வருகிறார்.