சசிகலாவை காப்பாற்ற சிறையிலுள்ள சிசிடிவி காட்சிகள் அழிப்பு.. டிஜிபி ரூபா வெளியிட்ட திடுக் தகவல்
பார்வையாளரை சந்திப்பதற்காகவே சசிகலாவுக்கு தனி அறை உள்ளதாகவும், அவர் மீது புகார் கூற ஆதாரமாக இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டதாகவும் ரூபா 2-ஆவது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: பெங்களூரு பரப்பரன அக்ரஹாரா சிறையில் பார்வையாளர்களை சந்திப்பதற்காகவே தனி அறை ஒதுக்கீடு செய்துள்ளதாக சிறை துறை டிஐஜி இரண்டாவது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிறை துறை டிஐஜியாக உள்ள ரூபா, கடந்த சில நாள்களுக்கு முன் அச்சிறையை ஆய்வு செய்ய சென்றார். அதில் தாம் கண்ட முறைகேடுகள் குறித்து மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கையாக சமர்ப்பித்தார்.
அதில் சிறையில் சசிகலாவுக்கு விஐபி உபசரிப்பு வழங்க அவரிடம் இருந்து சிறை துறை அதிகாரிகளும், சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவும் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இது தமிழக மற்றும் கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.
ரூபாவின் புகார்கள் உண்மைக்கு புறம்பானவை என்று சிறை துறை டிஐஜி சத்தியநாராயண ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். அதே சமயம் சிறையில் முறைகேடுகள் நடைபெற்று வருவதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ரூபா தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி, சிறை துறை டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோருக்கு மீண்டும் ஒரு புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கென்று தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அறையில் 5 நாற்காலிகள் போடப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் சசிகலாவுக்கு எதிராக புகார் எழுந்ததை தொடர்ந்து அவரது அறையில் இருந்த 7,8-ஆம் எண் கொண்ட சிசிடிவி கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும். அதை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.