அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் தனி தட்டில் சாப்பிடுங்க- மும்பை ஐஐடியில் உத்தரவு
மும்பை ஐஐடியில் அசைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அதற்கென உள்ள தனி தட்டில் மட்டுமே பரிமாற வேண்டும் என்று விடுதி மெஸ்களுக்கு ஈமெயில் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை: மும்பையில் உள்ள ஐஐடி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அசைவம் சாப்பிடுவதாக இருந்தால் தனி தட்டில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்றும் சைவ உணவுகளை சாப்பிடும் மாணவர்களின் தட்டுக்களை உபயோகப்படுத்தக்கூடாது என்றும் இ மெயில் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள ஐஐடியில் சைவம், அசைவ உணவுகள் தனித்தனியாக வழங்கப்படுகின்றன. சைவ உணவுகளை எவர்சில்வர் தட்டிலும், அசைவ உணவுகளை பிளாஸ்டிக் ட்ரே தட்டிலும் சாப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை சில ஆண்டுகளாகவே ஐஐடியில் வழக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் எவர்சில்வர் தட்டுக்களில் சாப்பிடுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து உணவு விடுதியை நிர்வகிக்கும் மாணவர் அமைப்பு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் பிளாஸ்டிக் தட்டுக்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். சைவ மாணவர்களின் தட்டுக்களை உபயோகிப்பதால் அவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அசைவம் சாப்பிடும் மாணவர்களே வரவேற்றுள்ளனர். இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான். இதை இப்போது நினைவூட்டுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். சில மாணவர்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் எவர்சில்வர் தட்டுக்களில் அசைவ உணவுகளை வைத்து சாப்பிட்டதால் இந்த அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.