ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு விடுதலை!
ஸ்ரீநகர்: இந்தியா வருகை தரும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸை சந்திப்பதைத் தடுப்பதற்காக ஜம்மு காஷ்மீர் பிரிவினை கோரும் தலைவர்கள் இன்று திடீரென வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் வரும் ஞாயிறன்று இந்தியா வருகிறார். டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அவர் சந்தித்து பேசுகிறார்.
இந்தியா வருகை தரும் முன்பாக சர்தாஜ் அஜீஸ், தம்முடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அழைப்புவிடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த சந்திப்பை தடுக்கும் வகையில் இன்று ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் திடீரென வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
பிரிவினைவாத தலைவர்கள் உமர் ஃபரூக், சையது அலி ஷா கிலானி, யாசின் மாலிக் ஆகியோரை ஜம்மு காஷ்மீர் போலீசார் வீட்டுக் காவலில் வைத்தனர். பின்னர் சில மணிநேரங்களில் சிலரை மட்டும் விடுதலை செய்தனர்.
ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலி ஷா கிலானி மட்டும் தொடர்ந்து வீட்டுக்காவலிலேயே வைக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட பிரிவினைவாத தலைவர்கள், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்திப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.