பொது இடங்களில் முகத்தை மூடக்கூடாது... ஆக்ரா இளைஞர்களுக்கு போலீஸ் உத்தரவு
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ள 18 வயது முதல் 30 வயது வரையிலான ஆண்கள், பொது இடங்களில் முகத்தை மூட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ள 18 வயது முதல் 30 வயது வரையிலான ஆண்கள், பொது இடங்களில் முகத்தை மூட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில், பெண்கள் பொது இடங்களில் நடந்து செல்லும்போதும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் போதும் துணியைக் கொண்டு முகத்தை மூடியபடி செல்கின்றனர்.
இது பள்ளி மற்றும் கல்லூரி இளம்பெண்கள் மத்தியில் வழக்கமாகவே இருக்கிறது. சாலைகளில் பெருகியுள்ள தூசு பிரச்னை மற்றும் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இதுபோல் செய்வதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இதே பாணியை தற்போது ஆண்களும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் பெருகிவிட்டுட்ட மாசுபாட்டால் ஆண்களும் முகத்தை மூடியபடி செல்கிறார்கள். குறிப்பாக, உ.பி., மாநிலம் ஆக்ரா, மதுரா உள்ளிட்ட நகரங்களில் இந்த போக்கு அதிகமாக காணப்படுகிறது.
இதுகுறித்து ஆக்ரா டிவிஷனல் கமிஷனர் ராம்மோகன் ராவ் கூறுகையில், " மதுரா அருகே முகமூடி கொள்ளையர்கள் நகைக் கடையை கொள்ளையடித்ததுடன், இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்தனர். இது அங்கே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல், பிரோசாபாத் அருகே தொழில் அதிபர் ஒருவரை சிலர் கடத்தி சென்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் முகத்தை துணியால் மூடிக்கொள்கிறார்கள். இதனால் குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் போலீசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில், 18 வயது முதல், 30 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தங்கள் முகத்தை மூடியபடி பொது இடங்களில் நடமாட கூடாது. மேலும், சாலையில் நடந்து செல்லும் போது ஹெல்மட் அணிந்தபடி செல்ல கூடாது." என்று கூறினார்.