சிந்துரத்தினா போர்க்கப்பல் விபத்து... 7 அதிகாரிகளே காரணம் என கண்டுபிடிப்பு.. விசாரணைக்கு உத்தரவு
டெல்லி: ஐஎன்எஸ் சிந்துரத்தினா போர்க்கப்பலில் ஏற்பட்ட தீவிபத்துக்குக் காரணம் 7 அதிகாரிகளே என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனோகர் பாரிக்கர் ராஜ்யசபாவில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், ஐஎன்எஸ் சிந்துரத்தினா போர்க்கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான விசாரணையை மேற்கொண்ட குழு, இந்த விபத்துக்கு 7 அதிகாரிகளே காரணம் என்று கண்டறிந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஏழு அதிகாரிகளும் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் நடந்து கொண்டதால்தான் விபத்து ஏற்பட்டதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேற்கு பிராந்திய கடற்படை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விசாரணைக் குழுவின் விசாரணை இன்னும் முழுமை பெறவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றார் அவர்.
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐஎன்எஸ் சிந்துரக்ஷ்க் என்ற போர்க்கப்பலில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது இதில் கப்பல் கடலில் மூழ்கியது. அதில் இருந்த 18 பேர் உயிரிழந்தனர். அதேபோல இந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி ஐஎன்எஸ் சிந்துரத்தினா கப்பலில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
கப்பலின் மேலே ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.