விவசாய நிலத்தில் கிடந்த ஏழு தலை பாம்பின் தோல்.. கோயில் கட்டி வழிபடும் கிராம மக்கள்!
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏழு தலை பாம்பின் தோல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆதாம் ஏவாள் காலம் தொட்டு பாம்புக்கும் மனிதர்களுக்கும் ஏகப்பட்ட தொடர்புண்டு. பாம்பு குறித்த செண்டிமெண்டுகளும் இங்கு ஏராளம். பாம்பு பழிவாங்கும், பாம்பு மனித உருவம் எடுக்கும் என ஏராளமான கதைகளும் இங்குண்டு.
அதை வைத்து நீயா, மனைவி ஒரு மாணிக்கம், நாகாத்தம்மன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களும், நாகினி போன்ற சீரியல்களும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் எல்லா ஊரிலும் ஒரு புற்றுக்கோவிலை நிச்சயம் பார்க்க முடியும்.
ஏழு தலை பாம்பு
அதுபோல் தான் கர்நாடக மாநிலத்தில் பாம்பு பற்றிய ஒரு செய்தி வைரலாகியுள்ளது. அம்மாநிலத்தின் ராமநகரா மாவட்டத்தில் உள்ள கனகபுரா எனும் ஊருக்கு அருகே உள்ளது மாரிகௌதனா தோட்டி கிராமம். இந்த கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஏழு தலை பாம்பின் தோல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பாம்பு கோவில்
கடந்த மே மாதம் மாரிகௌதனா தோட்டி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் ஏழு தலை பாம்பின் தோல் கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள், அந்த இடத்தில் ஒரு பாம்பு கோயிலை எழும்பிவிட்டனர். அந்த கோயிலில் தினந்தோறும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.
மீண்டும் தோல்
இந்த நிலையில், ஏழு தலை பாம்பின் தோல் மீண்டும் அந்த கோயிலின் அருகே கண்டெக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதனை காண சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் அந்த கிராமத்தில் குவிந்து வருகின்றனர். பூஜைகளும், வழிபாடுகளும் அந்த கோயிலில் களைக்கட்டி வருகின்றன.
மக்கள் வியப்பு
அறிவியல் அடிப்படையில் எந்த ஒரு உயிரினமும் இதுவரை மூன்று தலைகளுக்கு மேல் பிறந்ததில்லை. அதுவும் பாம்புகளில் ஏழு தலை கொண்டவை உயிரோடு பார்க்கப்பட்டதில்லை. ஐந்து தலை கொண்ட ஆதிசேஷன் பாம்பினை கிருஷ்ண புராணத்தில் தான் படித்திருக்கிறோம். எனவே கர்நாடகாவில் ஏழு தலை பாம்பின் தோள் கண்டெடுக்கப்பட்டுள்ளது வியப்பையே அளித்துள்ளது.