திருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு கொள்வது பலாத்காரம் கிடையாது.. ஒடிசா ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
புவனேஸ்வர்: திருமணம் செய்து கொள்வதாக போலியாக வாக்குறுதி அளித்து உடலுறவுகொள்வது, இந்திய தண்டனை சட்டம் 375வது விதியின் கீழான பலாத்கார குற்றச் செயலாக கருதப்படாது என்று, ஒடிசா மாநில உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம், கோரபுத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் அந்தப் பெண். இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதல் நெருக்கமாக மாறி ஒருகட்டத்தில் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார்.
இதையடுத்து, அந்த நபர் திருமணம் செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி, காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
போற போக்க பார்த்தா.. இந்த வருஷம் எல்கேஜி யூனிபார்ம் இதுதானா.. வைரல் வீடியோ
பலாத்காரம்
குற்றம்சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, அந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு வந்தது. இதை நீதிபதி பனிகிரகி விசாரித்தார். அவர் கூறுகையில், பலாத்காரம் என்பதற்கான விளக்கம் சட்டப் பிரிவு 375இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பலாத்கார வரையறை
ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக நடப்பது, சம்மதம் இன்றி நடப்பது, கொலை செய்வதாக மிரட்டி, அல்லது காயப்படுத்தி விடுவதாக மிரட்டி பெண்ணின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு உடலுறவு கொள்வது, அந்த நபரை பெண் தனது கணவர் என்று நினைத்து உறவு கொள்வது, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது அல்லது மயக்க மருந்து கொடுத்து உறவு கொள்வது பலாத்காரமாகும்.
சிறுமி
இதேபோல, 18 வயதுக்கு கீழே உள்ள சிறுமியுடன் உறவு கொள்வது, தனது சம்மதத்தை தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது ஆகியவை பலாத்கார குற்றம் என்றும் அந்த சட்டப்பிரிவில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்துகொள்ளப் போவதாக நினைத்து உறவு கொண்டுள்ளது பலாத்கார குற்றத்தின் கீழ் வராது. இவ்வாறு குறிப்பிட்டார் நீதிபதி.
அதிகரிக்கும் மோசடிகள்
மேலும், நீதிபதி கூறுகையில், பொருளாதாரத்தில் உயர்தட்டில் உள்ள ஆண்கள், ஏழைப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டு, பிறகு அவர் கர்ப்பம் அடைந்ததும், திருமணம் செய்ய மறுக்கும் போக்கு என்பது அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம். ஆனால் இதை பலாத்கார பிரிவின் கீழ் சேர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.