ஆபாச வீடியோ: அமைச்சர் பதவியிலிருந்து மட்டுல்ல, ஆம் ஆத்மியிலிருந்தும் சந்தீப் குமார் நீக்கம்
டெல்லி: ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் சந்தீப் குமாரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி குழந்தைகள் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் சந்தீப் குமார் குறித்த ஆபாச சிடி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிடியில் அமைச்சர், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளும், புகைப்படங்களும் இருந்தது. ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் இந்த வீடியோ வெளியானது.
இது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் முதல்வர் கெஜ்ரிவால் உடனடியாக அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் கொள்கைக்கும் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அமைச்சர் சந்தீப்குமார் பெயரில் வெளியான சிடி பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சர் பதவி பறிப்பு
ஆலோசனைக்கு பின்னர் அமைச்சரவையில் இருந்து சந்தீப்குமாரை நீக்கம் செய்ய கெஜ்ரிவால் முடிவு செய்தார். இதனை அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் உடனடியாக அறிவித்தார்.
சந்தீப் குமார் குற்றச்சாட்டு
நான் ஒரு தலித் என்பதாலே இத்தகைய குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்படுகின்றன என்று சந்தீப் குமார் பேட்டி அளித்தார். ஆம் ஆத்மி கட்சிக்காக எப்போதும் உழைப்பேன் எனவும், ஆம் ஆத்மி கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதாலேயே பதவி விலகியதாகவும், நான் எந்த தவறான காரியங்களிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
கட்சியில் இருந்து நீக்கம்
இந்நிலையில், அவரை ஆம்ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அணைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3வது அமைச்சர்
கடந்த 2015ம் ஆண்டு, டெல்லியில் ஆம்ஆத்மி அரசு பொறுப்பேற்ற பிறகு பதவி நீக்கம் செய்யப்படும் 3வது அமைச்சர் சந்தீப் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஆசிம் அகமது கான் ஊழல் புகார்கள் காரணமாகவும், ஜிதேந்தர் சிங் டோமர் போலி கல்வி சான்றிதழ் விவகாரம் தொடர்பாகவும் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.