பாலியல் குற்றச்சாட்டில் கைதான தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு ஜாமீன்
டெல்லி: தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடன் வேலை பார்க்கும் பெண் பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்த புகாரின்பேரில், தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால், கடந்த ஆண்டு நவம்பர் 30ம்தேதி கோவா மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோவா சிறைச்சாலையில் நீதிமன்ற காவலின்கீழ் தேஜ்பால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
கோவா நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அவர் ஜாமீன் கேட்டு போட்ட மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துவிட்டன. சமூக அந்தஸ்து உள்ள தேஜ்பாலால் சாட்சியங்கள் கலைக்கப்பட கூடும் என்ற எதிர்தரப்பு வழக்கறிஞரின் வாதத்தால் தேஜ்பாலுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தேஜ்பாலின் தாயார் சகுந்தலா, கோவாவில் கடந்த மாதம் 5ம்தேதி மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ள தன்னை இடைக்கால ஜாமீனில் வெளியேவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேஜ்பால் சார்பில் அவரது வழக்கறிஞர் சந்தீப் கபூர் மனு தாக்கல் செய்தார். தாயாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள தேஜ்பாலுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த காலகட்டத்தில் அவர் போலீஸ் காவலின் கீழ் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதற்கு முன்பாக, மூளை கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தாயாரை பார்த்து நலம் விசாரிக்க தேஜ்பாலுக்கு நீதிமன்றம், இருமுறை அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் ரெகுலர் ஜாமீன் வழங்கப்படது இல்லை. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த தருண் தேஜ்பால், ஜாமீன் வழக்கில், அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. சாட்சியங்களை கலைக்க மாட்டேன், சாட்சியங்களை அச்சுறுத்த மாட்டேன் என்ற தேஜ்பாலின் உறுதிமொழியை ஏற்று அவருக்கு உச்சநீதிமன்றம் ரெகுலர் ஜாமீனை இன்று வழங்கியுள்ளது. மேலும், இன்னும் எட்டு மாதங்களுக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்குமாறு கோவா அரசுக்கு, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.